Friday, March 19, 2010

படப்பெட்டி...

எவ்வளவோ மறக்கமுடியாத சிறுநினைவுகள், அதில் இன்பம் தரும் நினைவுகள் ஏராளம், அதைப் பற்றி பேசும்பொழுது நண்பர்கள் அனைவர் மனதிலும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறக்கும். ஆனந்தத்தில் வானில் பறப்பது போல் இருக்கும், இறுதியில் மிஞ்சுவது ஏக்கம் மட்டும்தான். காலம் எவ்வளவு மாறிவிட்டது!

என்னுடைய சிறுவயதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மாலையும் இல்லத்தில் மக்கள் வெள்ளம் நிறைந்திருக்கும், காரணம் ஒளியும் ஒலியும் பார்ப்பதற்கும், தமிழ் படம் பார்ப்பதற்கும் தான். காத்திருந்து பார்க்கும் சுகமே தனிதான். அதே போல் அன்றிருந்த இளவட்டங்கள் எல்லோருக்கும் இருக்கும் ஆர்வம் தாமும் ஒரு படம் காட்ட வேண்டும் என்பதுதான். கிராமங்களில் இருக்கும் எங்களால் படமெல்லாம் எடுக்க முடியாது, ஆனால் நன்றாகவே படம் காட்ட முடியும், அதில் ஒரு முயற்சிதான் இந்தப் படப் பெட்டி.

பொதுவாக இரண்டு குழுக்கள் இருந்தது எங்களது தெருவில், அதில் ஒன்று மூன்று முதல் ஐந்து வகுப்பு வரைப் படிக்கும் எங்களது குழு, இரண்டாவது ஆறில் இருந்து எட்டு வகுப்பு வரைப் படிக்கும் எங்களது சகோதரர்களின் குழு. இரண்டுக்கும் சரியானப் போட்டியிருக்கும், எதற்கு? படம் காட்டுவதற்குதான்!

ஒரு அட்டைப் பெட்டியை எடுத்து, இரண்டு துவாரங்கள் எதிர் எதிர் சுவரில் இட்டு விடுவோம், ஒரு துவாரத்தில் லென்ஸ் பொருத்தப்படும், மற்ற துவாரம் டார்ச் லைட்டைப் பொருத்தி ஒளியை அடிப்பதற்காக. இடையில் இரண்டு உருளைகள் ஃபிலிம் ரோல் சுற்றுவதற்காக, அதில் சுற்றுவதற்காக கைப்பிடி எல்லாம் வைத்து அந்தப் பெட்டியை எடுத்துக் கொண்டு தெருவில் போய் ப்ரொஜெக்டர் ரெடி, ரெடி என்று கூட்டமாய் ஓடி ஒரே அமர்க்களம் தான். அன்றிருந்த ஒவ்வொரு சிறுபயலும் ஒரு சையிண்டிஸ்ட் தான்! ஆனால் இதைச் செய்வதும் சாதாரண வேலையல்ல! ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி வரும் லென்ஸின் ஃபோக்கல் லென்த் எவ்வளவு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அப்படி வாங்கி வந்த லென்ஸை ஃபிக்ஸ் செய்ய எத்தனை அட்டைப் பெட்டிகள் வேறு வேறு அளவை எடுத்துப் பார்க்க வேண்டும் தெரியுமா! இந்த அட்டைப் பெட்டிகள் பல கடைகள் ஏறி இறங்கி பொருக்கப்படும். பல சோதனைகளுக்குப் பிறகு ஒரு பெட்டி சரியாகப் பொருந்தும்.

ப்ரொஜெக்டர் எல்லாம் ரெடிதான் ஆனால் ஃப்லிம் ரோல்? அன்று இருந்த சின்னச் சின்ன பெட்டிக் கடைகளிலெல்லாம் ஃப்லிம் விற்கப்படும், அதிகமாய் கிடைப்பது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படத்தின் ஃப்லிம்கள் தான். ஆனால் அவையெல்லாம் ரோல் ஆக கிடைக்காது. சிறிய சிறிய துண்டாகத்தான் கிடைக்கும். முதலில் அந்தப் பெட்டிக்குள் ஒவ்வொரு ஃப்லிமாக கையில் பிடித்துக் கொண்டு டார்ச் அடித்து சுவரில் அந்தப் ஃப்லிமின் உருவத்தைப் பார்ப்போம், பெரிதாக தெரியும் அதன் உருவத்தைக் கண்டவுடன் மனதில் பிறக்கும் குதூகலமும், ஆனந்தச் சிரிப்புகளும் அப்பப்பா! இன்று நினைத்தாலும் ஆனந்தம் தான்.

இந்த சிறு சிறுத் துண்டுகளை வைத்துப் படம் ஓட்டுவது எப்படி? கூட்டமாய் உட்கார்ந்து யோசித்தோம். பிறகு ஒரு முடிவுக்கு வந்து, இந்த சிறு ஃப்லிம்களையெல்லாம் நூல் கண்டின் உதவியால் அதன் சைடில் இருக்கும் துவாரத்தின் வழியாக இணைத்து ரோல் ஆக்கிவிடலாம் என்று முடிவுசெய்து களத்திலும் இறங்கினோம். ஆனால் நூல் கண்டுகள்தான் வேஸ்டானது, ஒரு ஃப்லிம் ரோல் கூடத் தயாராக வில்லை! ஒரே சோகமாகிப் போனது!

இதற்கிடையே எங்கள் போட்டிக் குழுவான சகோதரர்களின் குழுவில் ஒரு பையன் எங்கோ வெளியூரில் இருந்து ஒரு ஃப்லிம் ரோல் வாங்கி வந்தான், அதை வைத்துப் பெரிய ஸீன் போட்டுக் கொண்டு திரிந்தார்கள். எங்களுக்கோ ஒரே பொறாமை அவர்கள் மேல்! ஒரு நாள் மின்சாரம் கட் ஆன இரவு, நாங்கள் இன்று படம் காட்டப் போகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு பெட்டியை எடுத்துக் கொண்டு கூட்டம் சேர்த்தார்கள். எங்களோடு இருந்தப் பலப்பேர் அந்தக் கூட்டத்தில் சென்று சேர்ந்து விட்டார்கள். அதனால் பெரிய சண்டை எல்லாம் நடந்தது, சில நண்பர்களுடன் உன் பேச்சு காய் என்று சொல்லிவிட்டு சிலநாட்கள் பேசாமல் எல்லாம் இருந்தோம். படம் காட்டுகிறேன் என்று ஜம்பம் விட்ட அவர்களின் பேச்சு பொய் ஆகிப் போனது, ஃப்லிம் ரோல் தான் அவர்களிடம் இருந்ததே தவிர் அவர்களின் படப்பெட்டியின் டெக்னாலஜி ஃபெய்லியர் ஆகிப் போனது, ஃப்லிம் ரோல் சுத்தவே இல்லை. வெறும் டார்ச் லைட் வெளிச்சம் மட்டும்தான் தெரிந்தது. எங்களுக்கோ ஒரே கொண்டாட்டம், அவர்களுக்கு திண்டாட்டம்.

அதன் பிறகு, எங்களது அந்தப் பெட்டியை வைத்துக் கொண்டே சிலமாதங்கள் திரிந்தோம், எங்களுக்கு ஃப்லிம் ரோல் கிடைக்கவேயில்லை. வெறும் சிங்கிள் பிக்சரை வைத்து வைத்துப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொண்டு திரிந்தோம். பிறகு, ஆண்டு இறுதித் தேர்வு வந்தவுடன், பெட்டி பரணுக்குப் போனது நாங்களும் அந்தக் கோடை விடுமுறையில் அதை மறந்துவிட்டு வேறு விளையாட்டுகளுக்கு திரும்பி விட்டோம்...

சில சையிண்டிஸ்டுகள் அப்பொழுதே உருவாகியிருக்க வேண்டியது, என்ன செய்வது காலத்தின் கட்டாயமும் சந்தர்ப்பமும் சரியாக அமையவில்லை :-)

Friday, November 20, 2009

டிக்...டிக்...யாரது?

நான் பிறந்த ஊர், திட்டமிட்டு நல்ல வடிவமைப்பு கொண்ட ஊர், பேரூராட்சியாய் இருந்தது நான் அங்கு வளர்ந்த சமயம். தேர் ஓடுவதற்காக நான்கு சாலைகளை ஏற்படுத்தி சதுரமாக வடிவமைத்திருக்கின்றனர் எங்கள் முன்னோர். இந்த ஊரில் உள்ள ஒவ்வொரு தெருக்களுமே நல்ல கான்கிரீட் சாலைகளையும், open drainage எனப்படும் கழிவுநீர் வாய்க்கால்களும் சுமார் 30 வருடங்களுக்கு முன்னேயே ஏற்படுத்தப் பட்டிருந்தன. என்னடா இது டிக்...டிக்...என்று தலைப்பை போட்டுவிட்டு ஏதோ ஊரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கறானே என்று தானே யோசிக்கிறீர்கள், சற்று பொறுங்கள் விஷயத்துக்கு வருகிறேன்.

நல்ல கான்கிரீட் சாலைகள் இருந்ததாலோ என்னவோ மாலை மயங்கி சூரியன் மறைந்து விட்டால் தெருவில் பெரியோர், சிறியோர் என அனைவரும் கூடி விடுவோம். காலையும் மாலையும் நீர் தெளித்து, தென்னைக் குச்சி விளக்கமாறைப் போட்டு சுத்தம் செய்த தெருக்களாதலால், அனைவரும் தெருவிலேயே அமர்ந்து கொண்டு விளையாடுவோம். தகராறு வந்தால் அங்கேயே கட்டிப் பிடித்து உருளுவதும் தவறாது நடக்கும். இப்படி தெருக்களில் ஆண்களும், பெண்களும், சிறியவர்களும், சற்றே உயர்பள்ளியில் படிக்கும் பெரியவர்களும் சேர்ந்து ஏராளமான விளையாட்டுகளில் ஈடுபடுவோம். அதில் ஒன்றைத் தான் இப்பொழுது நான் இங்கு எழுதப் போகிறேன்.

இந்த விலையாட்டு ஒரு பேய் சம்பந்தப் பட்ட விளையாட்டு. இதில் முதலில் சாபூத்திரி போட்டு யார் அவுட் என்று முடிவு செய்யப்பட்டவுடன் ஒருவர் பேயாக மாறுவார். மற்றவர்கள் எல்லாம் மனிதர்கள்.

இந்தப் பேயானவர் சற்று தூரத்தில் நின்று கொண்டு டிக்...டிக்...என்று கதவைத் தட்டுவார். கதவை தட்டுவதென்றால் கதவெல்லாம் இருக்காது, சும்மா வாயிலேயே டிக்...டிக்...என்று சப்தம் செய்வதுதான். அதற்கு மற்ற குழுவில் இருக்கும் மூத்தவர் ”யாரது” என்று பதில் கேள்வி போடுவார்.

டிக்...டிக்...

யாரது?

பேயிது

என்ன வேண்டும்?

நகை வேண்டும்

என்ன நகை?

கலர் நகை

என்ன கலர்?

.....

என்ன கலர் என்று குடும்பத் தலைவர் கேட்டதும், பேய் ஒரு கலரை சொல்லும். உதாரணத்திற்கு பச்சை என்று சொல்கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள், அது சொல்லி நம் அருகில் வருவதற்குள் எங்கு பச்சைக் கலர் இருக்கிறதென்று தேடி அதை நம் விரலால் தொட்டு விடவேண்டும். இல்லை பேய் உங்களைத் தொட்டுவிட்டதென்றால் நீங்கள்தான் அடுத்தப் பேய். என்ன புரிந்து விட்டதா? இதுதான் விளையாட்டு.

படிப்பதற்கு மிகவும் சிறிய விளையாட்டுதான், ஆனால் இதை ஆரம்பித்தால் ஒரு மாலை முழுவதும் விளையாடுவோம். அதோடு பேய் கேட்கும் முன்னே என்ன என்ன நிறங்கள் நமக்கு அருகில் இருக்கிறது என்பதை முன்னரே தேடிப்பார்த்து வைத்திருக்கவேண்டும். அதே போல் பேயாக வருபவரும் என்ன என்ன நிறங்கள் அருகாமையில் இருக்கிறது என்னவெல்லாம் இல்லை என்று பார்த்து வைத்திருக்க வேண்டும். நல்ல கிராஸ்பிங் பவர் தேவை அதோடு விரைந்து ரியாக்ட் பண்ணுவதும் அவசியம்.

சில குறும்புக்கார சிறுவர்கள் என்ன வேண்டும்? நகை வேண்டும் என்ற இடத்தில் ஏடாகூடமாக சிலவற்றை கேட்பதும் உண்டு...

நல்ல விளையாட்டு அல்லவா?

நீங்களும் விளையாடிப் பாருங்கள்.

கொசுறு:
இந்த விளையாட்டை விளையாடும் பொழுது சில பெரிய பெண்களும் எங்களுடன் விளையாடுவார்கள், அவர்கள் உடையிலும் பல வண்ணங்கள் எல்லாம் இருக்கும். என்ன சொல்ல வருகிறேனென்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் அந்த சிறு வயதில் ஒன்றும் புரியவில்லை, இப்பொழுது நினைத்தால்தான் பயமாக இருக்கிறது ;-)

Sunday, June 28, 2009

பனை ஓலைக் காத்தாடி

நாம் ஏற்கனவே பட்டம் என்னும் காத்தாடியைப் பற்றி பகிர்ந்துகொண்டோம் நம் நினைவுகளை. இந்தக் காத்தாடியை அதோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம், இது காத்தாடி (fan) வகையைச் சேர்ந்தது.

சிறுவயதில் வீட்டில் விளையாடப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, நைசாக தப்பித்து சோளக்காட்டுக்குச் செல்வோம். அங்கு சோளத்தட்டை காட்டின் சொந்தக்காரருக்கு தெரியாமல் உடைத்து எடுத்து வந்து, அதோடு பனை ஓலையை கூட்டல் குறி வடிவத்தில் செய்து, நல்ல பெரிய முள்ளால் அந்தப் பனை ஓலையில் நடுவில் குத்தி சோளத்தட்டின் ஒரு முனையில் சொருகிவிடுவோம். அப்புறம் என்ன காத்தாடு ரெடி! அதை அப்படியே காற்று வரும் திசையில் காட்டினால் போதும் அருமையாக அந்தப் பனை ஓலை சுத்த ஆரம்பிக்கும். அப்புறம் என்ன திரும்பவும் போட்டிதான்.

யாருடைய ஓலை மிகவும் வேகமாக சுத்திகிறதோ அவர் முகத்தில் தெரியும் வெற்றிக் களிப்பு அப்பப்பா இன்று நாம் வேகமாக ஓட்டும் விலையுயர்ந்த ரிமோட் காரில் கூடத் தெரியாது. காரணம் டெக்னாலஜி, நம்முடைய சொந்த டெக்னாலஜி அல்லவா அது!

அப்படியென்ன பெரிய டெக்னாலஜி என நீங்கள் கேட்கலாம், ஆனால் நாம் வெட்டும் பனை ஓலை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும், அதோடு முள் குத்தும் விஷயமும் மிகவும் முக்கியம். முள்ளை ஒடிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சிறிது கவனம் தவறினாலும் விரலை பெயர்த்து விடும். இது எல்லாம் சரியாக இருந்தால் தான் அந்தக் காத்தாடி பறக்கும் இல்லையேல் அம்பேல்தான், முகத்தை தொங்கப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

காத்தடிக்கலனாலும் பரவாயில்ல, அந்தக் காத்தாடிய அப்படியே கையில பிடிச்சுகிட்டு ஓடினா போதும், சும்மா கரகரனு சூப்பரா சுத்தும். இதெல்லாம் நல்ல என்ஜாய் பண்ணிட்டு புழுதி படிஞ்சி வீட்டுக்குப் போனா நல்லா மொத்துவாங்க, இருந்தாலும் அடுத்த வாரம் லீவுலயும் அதே சோளக் காட்டுக்கு கால் தானா போகும்.

நம்மளோட மூளைக்கும் நல்ல வேலை, அதே நேரத்துல உடம்புக்கும் நல்ல எக்ஸர்சைஸ்...

நாம பேட்டண்ட் வாங்காம விட்டதால இன்னைக்கு இதையே சைனாக்காரன் பிளாஸ்டிக்ல செஞ்சி 20 ரூபாய், 30 ரூபாய்னு நம்ம கிட்டயே விக்கறான் நாமளும் நம்ம குழந்தைங்களுக்கு வாங்கிக் குடுக்குறோம். ரொம்ப ஹை டெக் வேர்ல்டா போயிடுச்சு, ஆனா நம்ம வாண்டுகளோட மூளை வளர்ச்சி அண்ட் திங்கிங் பவர்?!!!!

Monday, June 1, 2009

பம்பாய் மிட்டாய்...

இன்னிக்கு வகை வகையாக சாக்லெட்டுகள், இனிப்புகள் ஆயிரக்கணக்கில கிடைக்குது, ஆனாலும் அந்த நாளில சாப்பிட்ட பம்பாய் மிட்டாயைப் போல வருமா!

ஒரு குச்சியின் உச்சியில சலங்கையும், ஜால்ராவும் கையில வைத்திருக்கும் பொம்மையை வைத்துக் கொண்டு ச்சலக்கு ச்சலக்கு ஜல் ஜல் என்று சத்தம் செய்து கொண்டு வருவான் பம்பாய் மிட்டாய்க்காரன். அப்படி என்ன அதுல விஷேசம்! சிவப்புக் கலரும், வெள்ளைக் கலரும் வரி வரியா இருக்குற மிட்டாய் அது. ஒரு குச்சியோட உச்சியில பொம்மை இருக்கும், அந்த பொம்மையோட கையில ஜால்ராவ கட்டி அதுல இருந்து தொங்கற கயித்த பிடிச்சி ஜல் ஜல்னு அடிச்சிகிட்டே வருவான். அந்த பொம்மைக்கு கீழ ஒரு பாலிதீன் பை சுத்தி இருக்கும் அதுக்குள்ளதான் நம்ம பம்பாய் மிட்டாய சுத்தி வைச்சிருப்பான் மிட்டாய்க்காரன்.

ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தா நீளமா வரும், நல்ல சுவையாவும் இருக்கும். இதுல விஷேசமே நீங்க குடுக்கற காசுக்கு தகுந்த மாதிரி நீங்க விரும்பற வடிவத்துல கெடைக்கும் இந்த மிட்டாய். வாட்ச் மாதிரி வேணுமா, காந்தி கடிகாரம் மாதிரி வேணுமா, மோதிரம் வேணுமா, இல்ல வளையல் மாதிரி வேணுமா என்ன மாதிரி வேணும்னு சொல்லுங்க அந்த மாதிரி கெடைக்கும் பம்பாய் மிட்டாய்.

அதை சாப்பிடறமோ இல்லையோ, வாங்கி கையிலயும், கழுத்துலயும் கட்டிகிட்டு மத்த பசங்க முன்னால கொஞ்சம் ஸீனப் போட்டுட்டு சாப்பிடற சந்தோஷம் இருக்கே அது எந்த கேட்பரீஸ்லயும் வராது.

பம்பாய் மிட்டாய்க்காரன் ரெகுலரா எல்லாம் வரமாட்டான், வாரத்துக்கு ஒருதடவைதான் வருவான். அப்படி வந்தான் தெருவுல இருக்கற அத்தனை வாண்டுகளும் சரி, பெரிய பசங்களும் சரி ஒரு பெரிய கூட்டமே அவனை சுத்தி நிற்கும்.

ஹீம், இன்னிக்கு அதெல்லாம் எங்க கெடைக்குது, அப்படியே கெடைச்சாலும் நம்ம பசங்கள வாங்கி சாப்பிட விடுவமா நாம! இதுதான் நம்ம அறிவியலின் வளர்ச்சி, கண்ண வித்து ஓவியம் வாங்குற மாதிரி...

கொசுறு: பம்பாய் மிட்டாய்ன உடனே பம்பாய்ல இருந்து இறக்குமதி பண்ணினது நெனைச்சுக்காதீங்க, நம்ம ஊரு மாரியம்மன் கோவில் பக்கத்துலதான் மிட்டாய காய்ச்சுவான்...

Sunday, May 17, 2009

மறக்கமுடியவில்லை...

இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.

வருகை புரிந்தோர் வரைபடம்...

Click to zoom in on my visitor map!
Create your free world visitor maps